யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை
உபுண்டு தமிழ்க் குழுமம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வாயிலாக கட்டற்ற மென்பொருளை பரப்ப நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாய் திரட்டப்பட்ட சிறு நிதியினைக் கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான அறக்கட்டளையொன்றை கடந்த பதினோறாம் தேதி பதிவு செய்திருக்கிறோம். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை தமிழகத்தில் தழைக்கச் செய்ய முன்னர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவை மீண்டும் துளிர் விட்டால் அதனோடு இணைந்து பணியாற்ற விழைகிறோம். ஆயினும் இது இயல்பால் தமிழகத்தில் தோன்றிய ஓர் அறக்கட்டளைக்குரிய குணங்களோடு திகழும்.
அறக்கட்டளையின் நோக்கங்களாவன:
- பகிர்ந்தும் எப்பொருட்டும் பயன்படுத்தத் தக்கதாக, படைக்கப்படும் மென்பொருள்களைக் கிடைக்கச் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.
- அத்தகைய மென்பொருள்களின் உருவாக்கத்திற்கும் பயன்பாட்டுப் பெருக்கத்திற்குமான செயல்களில் ஈடுபடுதல்.
உபுண்டு தமிழ்க் குழுமத்தின் காரணமாக எமக்கு அறிமுகமாகி இன்று இவ் அறக்கட்டளையை நிறுவுவதில் துணையிருப்போர் உதகை பத்மனாதனும் தங்கமணி அருணும் ஆவர். பதிவு செய்த நாளன்று தற்சமயம் NRCFOSS இல் பணியாற்றும் சுஜியும் மாலதியும் உடனிருந்தனர்.
அறக்கட்டளை நிறுவப்பட்டதற்கான அத்தாட்சி சான்று இன்னும் பெறப்படவில்லை. பெற்றதும் அறக்கட்டளைக்கான வங்கிக் கணக்கு உள்ளிட்ட பிற பணிகள் மேற்கொள்ளப்படும். அறக்கட்டளையின் முதற்கட்ட பணிகளாக சில மென்பொருள்களை உருவாக்கும் திட்டம் உள்ளது. அறக்கட்டளையின் இணைய தளமாக http://yavarkkum.org திகழும். இன்னும் முழுமையாக உருப்பெறவில்லை. போன வருஷமே பதிஞ்ச தளம். ரூபி ஆன் ரெயில்ஸ் மூலம் உருவாக்கத் திட்டம். மடலாடற் குழு போன்ற கட்டற்ற மென்பொருள் சமூகத்திற்கே உரிய விஷயங்களுக்கும் இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்கும்.
கடந்த காலங்களில் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் மூலமாக நாங்கள் மேற்கொண்ட பணிகளுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். உபுண்டு தமிழ்க் குழுமப் பணிகளுக்கு இவ் அறக்கட்டளை வருங்காலங்களில் பங்களிக்க கடமைப் பட்டுள்ளது. அதே போல் உபுண்டு தமிழ்க் குழமத்தின் பணிகளால் வருங்காலங்களில் ஏதேனும் நிதி திரட்டப்பட்டால் அவை இவ் அறக்கட்டளைக்கே போய்ச் சேருதல் நல்லது. விதிவிலக்கான காரணங்கள் எழலாம். இப்போதைக்கு இரண்டில் இருக்கும் அங்கத்தினரும் ஒன்றே. நாளை இப்படித்தான் தொடரும் என்று சொல்ல முடியாது. பார்க்கலாம்!
உபுண்டு தமிழ்க் குழுமத்தோடு நின்றுவிடாது மற்ற கட்டற்ற மென்பொருள் சார்ந்த பணிகளுக்கும் இவ் அறக்கட்டளையின் பணி இப்பொழுதிலிருந்தே விரியும்.
இல்லறம் ஏற்கும் ஆமாச்சு :-)
வருகிற ஆவணி மாதம் ஏழாம் தேதி அதாவது ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு ஆமாச்சுக்கும் கிருத்திகா புவனேஸ்வரிக்கும் பெரியோர்களது நல்லாசிகளுடன் திருமணம் நடக்க இருக்கு.
இடம்: ஸ்ரீ பாரதி ராம் கல்யாண மண்டபம்
லேக் வியூ லோடு, மேற்கு மாம்பலம்,
சென்னை
முகூர்த்தம்: காலை 7.30 – 9.00
அட இன்னும் என்ன, வேறெந்த வேலையும் வச்சுக்காதீங்க. நாளை குறிச்சு வச்சுக்கிட்டு கட்டாயம் வந்துடுங்க.
பி.கு: அதே நாள் பிள்ளையார் சதுர்த்தியும் கூட.. என்னடா இப்படி ஆச்சேன்னு நினைக்க வேண்டாம். பிள்ளையாரே முருகனையும் வள்ளியையும் சேர்த்து வைக்க தன் வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு போனவர்தான். யாரையாச்சும் சோடி சேர்த்து வைக்க தன்னோட பக்தர்கள் போயிருக்காங்ன்னா அவங்களுக்கு தான் அவரோட பரிபூரண அருள்.
இது தமிழியல்பு..
பொதுவா தமிழில் நான் கையெழுத்துப் போடுவதையும் எழுதுவதையும் காணும் பலர் ஏம்பா இவ்ளோ தமிழ்ப் பற்றான்னு கேக்கறதுண்டு. நேற்றைக்கும் துருபல் கூடுதலுக்குள் நுழையும் முன்னரும் இதேக் கேள்வி! சிறப்பான காரணங்கள் ஏதேனும் இருப்பின் இயல்பான விஷயங்களை தவிர்த்து விஷேஷமாக செய்வோம். வேதம், தேசிய கீதம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். பல் மாநில, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்காகவும் வர்த்தகம் முதலிய காரியங்களில் ஈடுபடுவதற்காகவும் ஹிந்தி ஆங்கிலம் முதலிய பாஷைகள் கற்கிறோம்.
மற்றபடி நான் இயல்பாக இருப்பது கண்டு உலகம் வியப்பது விந்தைதான். சில பேர்கிட்ட மாதவியோட கோவலன் ஏன் போனான்னு கேட்டா ஏதாச்சும் காரணம் தேடலாம்.. கண்ணகி கூட ஏன் இருந்தான்னு கேட்டா நான் என்ன சொல்வேன்னு சொல்லிட்டேன்.
கடவுளே!