கணிமொழி - இளவேனிற் காலத்தின் இரண்டாம் இதழ்
இளவேனிற் காலத்தின் இரண்டாவது இதழை உங்கள் முன் படைப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகின்றோம். புத்தாண்டில் இம்முயற்சியை துவங்கிய எம்கரங்களுக்கு வலுவூட்டும் விதமாக அமைந்த வாசகர்களின் கருத்துக்களுடன் இம்மாத இதழ்
துவங்குகிறது.
யுனிகோடில் கோட்டை விட்டவற்றையும் ஆக வேண்டியதற்கான தமது
பரிந்துரைகளையும் நயம்பட நமக்கு, தமக்கே உரிய தனித்தன்மையுடன்
எடுத்துரைக்கும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இரமண்ராஜ்
அவர்களின் நீதிக்கு நீதி கட்டுரையுடன் தொடர்கிறது.
நிறுவலிலேயே நின்றுவிடும் பலரது குனு லினக்ஸ் ஆவலுக்கு புத்துயிர்
ஊட்டும் விதமாக அமைந்துள்ள உபி (Wubi) மென்பொருள் கொண்டு
விண்டோஸுக்குள்ளிருந்தே உபுண்டு இயங்கு தளத்தினை நிறுவும் முறையை வண்ணத்
திரைக்காட்சிகளுடன் இலாவகமாக எடுத்துரைத்திருக்கிறார் அப்துல் ஹலீம்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் மாணவர் இவர்.
நிரலாக்கப் பழகும் போதே அந்நிரல் பன்மொழித்தன்மை வாய்ந்ததாக இருப்பதற்கான
எளிய அறிமுகத்தை தரும் பாரதியின் கெட்டெக்ஸ்ட் அறிமுகம், தங்கமணி அருணின்
ரெட்ஹாட் பொதி மேலாண்மைத் தொடர்ச்சி, எமது யுனிக்ஸ் ஆயத்தம் ஆகியன
தொடர்ந்து தம்மை வாசிக்கும் படி உங்களிடம் விண்ணப்பித்து நிற்கின்றன.
இந்திய சந்தைகளை தட்டும் நியோ பிரி ரன்னர் பற்றிய முக்கியமான செய்தியை
கொண்டுள்ள அக்கம் பக்கத்தை படிக்க மறவாதீர். காரணத்துடன் பிடிஎப் கோப்பு
தாமதப்படுத்தப் பட்டுள்ளது. இணையத்தில் அனைவரும் வாசித்த இரண்டொரு
நாட்களில் கிடைக்கப்பெறும்.
தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இம்மாத இதழ் பற்றிய தங்களது
மேலான கருத்துக்களை மறவாது மடலனுப்பவும். தங்களுடைய கட்டுரைகளையும்
இவ்விதழுக்கு அணிகலனாய் அடுத்த மாதம் எதிர்பார்க்கிறோம்.
பார்க்க படிக்க சொடுக்குக : http://kanimozhi.org.in
எல்லையிற் கூடும் எதிரியர்தம் எண்ணிக்கை..
நேபாளத்தில் மாவோயிஸ ஆட்சி மலர்கிறது. மாற்றம் இருப்பது என்றுமே சில சுயப் பரிசோதனைகளுக்கு நல்லதுதான். ஒரு தலைமுறை இவ்வாட்சி நீடித்திடின் இம்மக்கள் இதற்காக வருந்தலாம்.
விடுதலையடைவதாக எண்ணிக்கொண்டு விடுதலை பெற்றுத் தருவதாக போராடியோருக்கு அடிமைப்பட்டு போகும் இம்முறையை மலரச் செய்தமைக்கு. அப்படி ஆகாது என நல்லதையே நினைப்போம். ஆயுதம் தாங்கி பயங்கரம் புரிந்த பின்னும் மாவோயிஸ்டுகளுக்கு கிடைத்த கருத்து சுதந்தரம் இனி அவர்களை எதிர்ப்போருக்கு எப்படி கிடைக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம். காலம் பதில் சொல்ல காத்திருக்கிறேன்.
நிற்க.
ஏற்கனவே வங்காள தேசத்திலிருந்து அஸ்ஸாமுக்குள் பல இலட்சக்கணக்கில் ஊடுருவல். உல்பா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள். உள்நாட்டிலேயே சர்வதேச ஆதரவுடன் தலை விரித்தாடும் இசுலாமிய பயங்கரவாத குண்டுவைப்புகளும் விசுவாச சேர்க்கைகளும். போதாதக் குறைக்கு இங்கே தமிழகத்தில் வீசும் புலி வாசம். கஷ்மீர எல்லையில் சீன பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு.
இவை போதாதென்று தேசம் நெடுகே பரவிக் கிடக்கும் மாவோயிஸ நக்ஸலைட்டுகள். இவர்களுக்கும் இப்போ நேபாளத்தில் ஆட்சி அமைப்போருக்கும் தொடர்பே இல்லை என்றோ இவர்கள் எல்லாம் தனித் தனி மந்தைகள் என்றோ நினைத்திட வேண்டாம். எல்லாம் ஒரே சீனத்து விசுவாசிகள்.
ஆக சுற்றியிருக்கும் அண்டை நாடுகளில் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, இலங்கையிலிருந்து பயங்கரவாதம் பரவியது போக இப்போது நேபாளும் நேரடித் தாக்குதலில் இறங்கவுள்ளது. இச் செங்குறும்பர்களுக்கு செக்கிழுத்தாவது ஆட்சியில் நீடித்திட வேண்டுமெனும் நிலையில் மன மோகன மத்திய அரசு. இவர்களுக்கு நாட்டைச் சூழ நிற்கும் ஆபத்து அற்பந்தான்.
ஆயுதம் தாங்கிய நக்ஸலைட்டுகள் நேபாளத்தில் ஆட்சியமைக்கின்றனர். அது அவர் வழியில் இங்கே ஆயுதமேந்துவோருக்கு பெரும் ஊக்கமே. உதவியும் இனி எளிதாகிப் போகும். மேலும் நேபாளம் கடந்திருந்த சீனாவின் எல்லை இப்போ நேபாளாகிவிட்டது என்றே கொள்ளலாம்.
ஒழுக்கமற்ற அரசியற் நிலவுவது இவர்களுக்கு இடப்படும் உரம். இதை இந்த அரசியற் வாதிகள் நிச்சயம் புரிந்து கொள்ள போவதில்லை. திருந்தவும் போவதில்லை இப்போதைக்கு.
இப்படி சுற்றி இருக்கும் சர்வ தேசமும் தாக்க நோக்கும் சூழ்நிலையில் இவற்றை எதிர்கொள்ள பாரதத்திற்கு ஒரு வழியுண்டு. அணி சேரமாட்டேன் அது இதுன்னு பேசி ரெண்டுங் கட்டான் நிலைமையெல்லாம் எடுக்காம நேடோவின் உறுப்பு நாடாவது.
இதைப் பற்றியெல்லாம் எனக்கென்ன கவலை. மாசம் என் பையில் சம்பளம். இன்பமாய் வாழவே நாங்கள் பிறந்தோம் என, பொழுது போக்க இவற்றை பேசிக்கொண்டு, உல்லாசமாய் வாழும் நிரந்தர சம்பள நடுத்தர மற்றும் வர்த்தக வர்க்கம். நானும் அதில் வெட்கமின்றி அடக்கம்.