Archive for the ‘கட்டுரை’ Category
உரிமை உனக்கில்லை..
கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! அட! நம்ம நாட்டுல அதிகம் புழக்கத்துல இருக்கிற வாசகம். கீதைல கண்ணன் சொன்னதாக விளக்கப் படுவது. ரொம்ப பிரபலமான இந்த பாசுரத்திற்கு எமக்கு தெரிந்த அறிஞரொருவர் விளக்கமளித்தார்!
செய்யும் காரியத்திற்கு பலன் இல்லாது எப்படி போகும்? படிப்பதின் பலன் அறிவின் வளர்ச்சி! இன்னா இப்பகல் செய்தால் அதுவே முற்பகலில் வந்துடும் என்று வள்ளுவர் சொல்கிறார்.
பலனை எதிர்பார்க்காமல் யாரும் காரியம் செய்வதில்லை. இதைச் செய்தால் இது நடக்கும், நடக்கணும் என்றுதானே எல்லாரும் காரியம் செய்யறோம். அது வெற்றியடைகிறதா தோல்வியில் முடிகிறதா என்பது நமது கையில் முற்றிலும் இல்லை என்பது உண்மைதான்.
ஆகப் பலனை எதிர்பார்த்து தான் காரியம் செய்கிறோம். அப்போ கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதில் ஆழம் இல்லாது போகிறது.
அப்போ அந்த பாசுரத்திற்கு என்னதான் பொருள்! காரியத்தை செய்! பலன் நிச்சயம் கிடைக்கும்! ஏனெனில் பலன் இல்லாத காரியம் என்று ஒன்று இல்லை! ஆனால் பலனில் உரிமைக் கோராதே! பலன் கிடைக்காது போகலாம் என்பதற்காக காரியத்தினைச் செய்யாமல் இருப்பதற்கும் உனக்கு உரிமையில்லை! என்பதாக அவ்வறிஞர் கூறினார்.புத்தகம் ஒன்றை எழுதுகின்றேன். அதன் பலன் நிச்சயம் கிடைக்கும். பலரும் அதைப் படிப்பார்கள். புகழ்வார்கள்! இகழ்வார்கள்! எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இதன் மூலம் பணமும் பொருளும் கூடக் கிடைக்கப் பெறும். ஆக பலன் இல்லாது போய்விடாது.
நிற்க. இன்னிக்கு எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் பலனாகக் நாம் கருதுவது பெரும்பாலும் பைசாதான்! இதைச் செய்தா காசு கிடைக்குமா? இப்படித் தான் பலரும் கேட்கின்றனர்.
தமிழ் தமிழென்று சுத்தறியே பைசாக்கு பிரயோசனமுண்டா எனப் பலரும் கேட்பதுண்டு. பைசாக்கு பிரயோசமானக் காரியம்தான் செய்யவேண்டும் என்ற எண்ணம் பரவி நிற்கிறது. ஆனால் பலன் பைசாவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பிரச்சனை பலனில் பற்று ஏற்படுகிற போது வருகிறது. அதன் பலனாய் உரிமைக் கோரச் சொல்கிறது.
பலனில் உரிமை அதுவே பதிப்புரிமை என்று கூடச் சொல்லமோ!
பதிப்பில் உரிமைக் கோரத் துவங்குகிற போது என்னைத் தவிர யாருக்கும் இதனைப் பதிப்பிக்க உரிமையில்லை அல்லது இதைப் பதிப்பிக்க எமது முன்னனுமதி அவசியம் பெற வேண்டும் என்றெல்லாம் இது விரிவடைகிறது.
ஆக செய்யும் செயலின் பலன் நிச்சயம் கிடைக்கும். அதை நீ செய்தாய் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால் உரிமை உனக்கில்லை எனக் கருதிச் செய்! கண்ணன் இதைத் தான் கூறுகிறான் என்பது அவ்வறிஞரின் வாதம்.
படைப்புரிமை!
படைக்கப் பட்ட பொருளொன்று, அது படைக்கப் பட்ட நோக்கத்தினை எப்போது பூர்த்தி செய்து கொள்கிறது? யார் படைத்தாரோ அவருக்குப் பொருளீட்டித் தருகிற பொழுதா? அல்லது அதன் பலன் பலரையும் சென்றடையும் பொழுதா?
சிறு வயதிலிருந்தே இந்த கேள்வி அவ்வப்போது மனதில் எழுவதுண்டு. பதிப்புரிமை போன்றவற்றின் வெளிப்பாடுகளைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் காணும் போது சில சமயம் வியப்பாகவும் புதிராகவும் கூட இருந்ததுண்டு. மாணவர்களுக்காக கல்வியின் பொருட்டு வெளியிடப்படுகின்ற பாடப்புத்தகங்களில் “பதிப்புரிமை – வருடம்” – “தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்” என கொடுத்திருப்பார்கள். இது ஏன்? இதை மற்றவருக்கு விநியோகம் செய்வதில் என்னத் தவறு? என்றெல்லாம் யோசித்ததுண்டு.
நிற்க. நடைமுறையில் இது பொது மக்களால் பின்பற்றப் படுவதில்லை என்பது உண்மைதான். நகலகங்கள் நடமாடுவதே இவற்றால் தான். ஆனாலும் இவை பூதாகாரமாக வெடித்த சம்பவங்களும் உண்டு. ஒன்றல்ல பல!
தொடர்கிறேன்…