ஆமாச்சு

ஓர் அத்வைதி..

Archive for the ‘தற்சார்புடைமை’ Category

தற்சார்புடைமை இயக்கம்..

without comments

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக யாமிட்டிருந்த ஒரே பதிவு தற்சார்புடைமை பற்றியது. இது என்னவென்று என்னாலேயே இப்போதைக்கு விரிவாக விவரிக்க முடியாது. இதனை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலுத்து தோன்றத் தொடங்கியுள்ளது.

இதன்பொருட்டு நிறைய வாசிக்க வேண்டியுள்ளது. இப்போதைக்கு இதைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவ்வப்போது நான் சில நண்பர்களிடம் சொல்லி வரும் கருத்தையே முன்வைக்க முடியும்.

டில்லியில் இருக்கும் அதிகார மையத்திற்கு வரி செலுத்துவதென்பது சம்பாதிக்கத் தொடங்கி வருமான வரி கட்டத் தொடங்கியதிலிருந்து ஒரு வித உறுத்தலாகவே இருந்து வருகிறது. அதற்காக அங்கிருக்கும் மக்களும் எம்மக்கள் தான். அதே போல் தென் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு சென்னையில் இருக்கும் அதிகார மையத்திற்கு கட்டுப்படவும் விரும்பவில்லை.

மாறாக எனது அடிப்படைத் தேவைகளுக்கு வழியமைத்துக் கொடுக்கும் மிகச் சிறிய நிர்வாக அமைப்பிற்கு எமது பங்களிப்புகள் இருக்க வேண்டும். பொதுவான நன்மைகளுக்காக அவ்வமைப்பு சென்னைக்கும், தேசம் முழுமைக்குமான பொதுவான நலனுக்கா சென்னை தில்லிக்கும் பங்களிக்க வேண்டுமே ஒழிய, தனி மனித/ அமைப்புகளிடமிருந்து பிடுங்கப்பட்டு பின்னர் ஆள்வோரது கரிசனத்தில் காலதாமதமாட்டு திரும்பக் கிட்டச் செய்யும் முறை மாற வேண்டும்..

இச்சிந்தனையை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும். ம்ம்ம்… இப்போதைக்கு மனதில் ஊன்றத் தொடங்கியுள்ள சிந்தனை இது..

பி.கு: மாநில சுயாட்சி போன்ற கருத்துக்களின் ஆழம் அறியேன். அவற்றுடன் இவ்வெண்ணம் எவ்வளவு ஒத்துப்போகும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

May 18th, 2009 at 6:41 pm

தற்சார்புடைமை???

without comments

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முதற் கட்டங்களை கடந்து கடைசி கட்டங்களுக்குள் புகவிருக்கும் இச்சூழலில் – தற்சார்புடைமைக்கு ஏற்றதாக ஏதேனும் ஒரு கட்சியாவது குரல் கொடுக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில். எங்களுக்கு வாக்களியுங்கள் – உங்களுக்கு இதைச் செய்கிறோம் எனச் சொல்லும் எல்லாக் கட்சிகளின் குரல்களும் – ஒரு விதத்தில் – ஒரு மையத்திலிருந்து அதிகாராத்தை செலுத்தவே விரும்புகின்றன.

தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள ஏற்பட்டதாகக் கூறப்படும் ஜனநாயக அமைப்பின் கீழ் வரும் ஒரு பகுதியில் பயங்கர வெள்ளம் ஏற்படும் போது – தங்களைத் தாங்களே மீட்டுக் கொள்ளும் வலிமை கூட அற்றோராக – நாமே தேர்வு செய்த மைய அதிகார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஏந்திகளாக வாழ்கிறோம் என்பது தான் உண்மை. ஒரு நாடு – ஓர் அரசு என்பது அதிகாரத்ததை தன்னிடம் குவித்துக் கொண்டுள்ளதே தவிர எதிர்பார்த்தது போல் – அனைவருக்கும் பகிர்ந்தளித்திடவில்லை.

டில்லியில் இருந்து கொண்டு சென்னையில் வாழும் என்னை கட்டுப்படுத்தி – அதிகாரம் செலுத்தும் ஒரு அமைப்பை தேர்வு செய்திடும் பொருட்டு – வாக்களிக்க நான் விரும்பவில்லை. அதாவது என்னை தன்னை அண்டி வாழ வைக்கும் ஒரு அமைப்பை தேர்வு செய்ய நான் விரும்பவில்லை. சென்னையில் இருந்துகொண்டு கன்யாகுமரியில் வாழ்வோரைக் கட்டுப்படுத்தும் அமைப்பிற்கும் இது பொருந்தும். மக்கள் – ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தை எல்லாவற்றிற்கும் அண்டி வாழ்வது ஜனநாயகமாகாது. மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதே அரசாங்கத்தின் பங்கு.

தற்சார்புடையோராய் – தற்சார்புடைய பல்வேறு குழுக்களைச் சார்ந்தோராய் – அதே நேரம் ஒற்றுமையை எப்பொருட்டும் விட்டுக்கொடுக்காத – பரவலாக்கப்பட்ட முறையே நான் காண விரும்புவது. இக்குழுக்கள் நம்நாட்டில் குடும்பத்திலிருந்து தொடங்குகின்றன.

இன்றைய நாடாளுமன்ற முறை அத்தகையதாக தோன்றவில்லை. ஆனால் அதற்குள் இருந்துகொண்டு தான் அதைக் களைய வேண்டுமோ? காலம் விடைச் சொல்லும்..

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

April 25th, 2009 at 7:30 am