Archive for June, 2007
சாமி! இது நல்லதில்லீங்க…
‘அட! என்ன அச்சு! அ.. ஆ.. இ.. படிக்கலையா நீ!’ தூங்கி எழுந்தவாறே கேட்டான் கிச்சு!
ஏன் அப்படி கேக்கறன்னு கேட்ட அச்சுவிடம்,
‘இல்ல நான் தூங்கிக்கிட்டிருந்த போது ‘அஇஉ..யநத…’ ன்னு ஏதோ முணு முணுத்துகிட்டிருந்தியே அதான் கேட்டேன்!’ எனச் சொல்லி சோம்பல் முறித்தான் கிச்சு!
‘அதுவா! நேத்திக்கு நீ வாங்கி வந்த தமிழ்99 விசைப் பலகைல பயிற்சி செய்து கொண்டிருந்தேன்! அதான்! ஆனா பாரு ஆயிரமிருந்தாலும் பொனடிக் கீபோர்டு மாதிரி வராது! அப்பப்பா! நாலு வார்த்தை அடிக்கறத்துகுல்ல பெண்டு நிமிந்து போகுது இதுல’ என்றான் அச்சு!
இரு வந்துட்டேன்னு சொன்ன கிச்சு முகம் கழுவிக் கொண்டு வந்தமர்ந்தவாறே “இப்போ சொல்லு உன் பிரச்சனை என்ன?” என்றான்..
“அதான் சொன்னேனே ஆயிரமிருந்தாலும் பொனடிக் கீபோர்டு மாதிரி வராதுன்னு!” என்றவனிடன்…
ம்ம்ம்… எப்படி சொல்றேன்னு அழுத்தமாய் வினவினான் கிச்சு!
பின்ன! இதுல ammA ன்னா அம்மா வந்துடும்! தமிழ்99 ல ‘அ’ எங்க இருக்குன்னு தேடணும்.. ‘ம்’ எங்கயிருக்குன்னு பார்க்கணும்! அப்பப்பா! போதுண்டா சாமி! என்று அலுத்துக் கொண்ட அச்சுவிடன்,
சரி! சொல்றது ஓரளவுக்கு உண்மைதான்! ஆனா ஒரு கேள்வி! ammA ன்னா அம்மான்னு புரியறவனுக்கு அது “அம்மா”ன்னு ஏன் தெரியணும்.. ammA ன்னே தெரியலாமே! அ..ஆ..இ கூட
இனி a, A, i…ன்னு சொல்லிக் குடுக்கச் சொல்லலாமே! என்றான் கிச்சு.
“அதெப்படி! ஆயிரம் இருந்தாலும் நம்ம எழுத்து நம்ம எழுத்து தானே! அதை இங்கிலீஷல காமிக்கறத எப்படி ஒத்துக்க முடியும்” எனச் சொன்னான் அச்சு!
“அப்படி வா வழிக்கு! ஏதோ போதாத காலம்! தமிழ் தட்டச்சு செய்ய நாம இன்னிக்கு ஆங்கில விசைப்பலகை முறையில் துவங்கறோம். தமிழனுக்கு தமிழில் எழுத ஆங்கிலம் தெரிஞ்சுருக்கணுமா? விந்தைதான்!
பாரு இது இப்படியே போனா தமிழ் எழுத்து எதுக்கு! ஆங்கிலத்துலேயே தமிழை எழுதலாமேன்னு ஆரம்பிச்சுட்டா! அதான் சொல்றேன் கஷ்டமோ நஷ்டமோ கொஞ்சம் முயற்சி பண்ணி தமிழ்99 விசைவடிவத்தின் துணையோட தட்டச்சு செய்யப்பழகணும்னு! ” என முடித்தான் கிச்சு!
“ஆமான்டா கிச்சு நீ சொல்றதுல அர்த்தம் இருக்கு! ஆனா இந்த கேயுபுண்டுல இந்த வசதி எப்படி கிடைக்கும்?” என ஏற்றுக் கொண்ட அச்சுவிடம்..
“போடா! தூங்கி எழுந்தவனை இப்படித் தொல்லை பண்ணாதே! அப்பறமா சாவகாசமா சொல்றேன்!” எனக்கூறிய வாறே வாயிலை நோக்கிச் சென்றான் கிச்சு!
பெறுமதி அஞ்சல் சேவையில் உபுண்டு வட்டுக்கள்..
உங்களின் அன்பிற்கினிய உபுண்டு நிகழ் வட்டுக்கள் இனி பெறுமதி அஞ்சல் (Value Payable Post) சேவையின் மூலம் கிடைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
தாங்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருந்தால் வட்டொன்றுக்கு ரூ 150/- ம், பாரதத்தின் பிற பகுதிகளில் வசிப்பவராக இருந்தால் ரூ 200/- ம், அஞ்சல் காரரிடம் செலுத்தி விட்டு நிகழ்வட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் உபுண்டு தமிழ் குழுமத்தின் “அஞ்சலில் உபுண்டு திட்டம்” தொடரும்.
பெறுமதி திட்டம் துவக்கப் படுவதன் ஒரு நோக்கம் கட்டற்ற மென்பொருள் என்பது சுதந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பதை பதிய வைப்பதும் ஆகும்.
மேலும் உபுண்டு தமிழ் குழுமத்தின் எதிர்காலத் திட்டங்களுக்குத் தாங்கள் தோள் கொடுக்க இதையும் ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.
உங்கள் தேவைகளை amachu@ubuntu.com என்ற முகவரிக்குத் தெரியப் படுத்துங்கள். எங்களின் வளர்ச்சிக்குத் தோள் கொடுங்கள்.
படைப்புரிமை!
படைக்கப் பட்ட பொருளொன்று, அது படைக்கப் பட்ட நோக்கத்தினை எப்போது பூர்த்தி செய்து கொள்கிறது? யார் படைத்தாரோ அவருக்குப் பொருளீட்டித் தருகிற பொழுதா? அல்லது அதன் பலன் பலரையும் சென்றடையும் பொழுதா?
சிறு வயதிலிருந்தே இந்த கேள்வி அவ்வப்போது மனதில் எழுவதுண்டு. பதிப்புரிமை போன்றவற்றின் வெளிப்பாடுகளைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் காணும் போது சில சமயம் வியப்பாகவும் புதிராகவும் கூட இருந்ததுண்டு. மாணவர்களுக்காக கல்வியின் பொருட்டு வெளியிடப்படுகின்ற பாடப்புத்தகங்களில் “பதிப்புரிமை – வருடம்” – “தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்” என கொடுத்திருப்பார்கள். இது ஏன்? இதை மற்றவருக்கு விநியோகம் செய்வதில் என்னத் தவறு? என்றெல்லாம் யோசித்ததுண்டு.
நிற்க. நடைமுறையில் இது பொது மக்களால் பின்பற்றப் படுவதில்லை என்பது உண்மைதான். நகலகங்கள் நடமாடுவதே இவற்றால் தான். ஆனாலும் இவை பூதாகாரமாக வெடித்த சம்பவங்களும் உண்டு. ஒன்றல்ல பல!
தொடர்கிறேன்…