Archive for March, 2008
நிறைமதி நிருத்தநாதர்…
கடந்த ஒரு மாத கால தமிழக அரசியலில் அதிகம் அடிபட்டிருக்கக் கூடிய செய்தி சிதம்பத்து சிக்கல். பலருக்கும் பிரபலமான பெயர் ஓதுவார் ஆறுமுகசாமி!
பாவம் அவரை பலியாடாக்கித்தான் எவ்வளவு பேர் தங்களுக்கு ஆதாயந் தேடிக் கொண்டுவிட்டனர். இவ்வளவு ஆதாயம் தேடிக் கொடுத்தவருக்கு கழக குடும்பப் பணத்திலிருந்து மாசம் மூவாயிரம் என்ன முப்பதாயிரம் கூட வழங்கலாம்!
இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், தமிழுலகம் அதிகம் அறியாத பெயரொன்று உண்டு – நிருத்தநாதன்.
நித்தம் மனமுருகி தேனினும் இனிய தேவாரத்தை தினம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தினுள் ஓதும் உயர்ந்தவர். தமிழுலகம் இவரையறியட்டும். நிறை குடங்கள் தளும்புதில்லை. உண்மைதான்.
வீட்டுக்கு போக வழி சொன்ன தேவாரத் திருமுறைகளை, கோட்டையை பிடிக்க திட்டமிடும் கயமை குணங் கொண்ட நீசர்களுக்கு, அடமானம் வைக்கிறோம் என்பதை அரைகுடங்கள் உணரட்டும். எதுக்கு யார் கூட கூட்டு வைக்கணுமுன்னு விவஸ்தை வேணாம்!
தீட்சிதப் பெருமக்களும் தமிழ்ப் பெருங்குடியினரும் எம்மறை நெறியை காக்க சைவத் திருமறைகள் தோன்றினவோ அதற்கே புறம்பாக அதனையே திருப்பி விட மேற்கொள்ளப்படும் அவல அரசியற் முயற்சிகளை இனங்கண்டு வேரறுத்து ஒன்றுபடட்டும்.
“அருநெறியமறை” வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
“திருநெறியதமிழ்” வல்லவர் தொல்வினை தீர்தல்எளிதாமே – திருஞானசம்பந்தர்
கடன் பட்ட நெஞ்சே கலங்காதே!
அதிகாலை கண்விழித்து
அயராமல் தினமுழைத்து
உண்பது மறந்து உறக்கம் தவிர்த்து
கடன்கழிப்பதை கவனமாய்
மானமென மதித்து செய்யும்
மக்கட் பெருங்கடலே!
கேட்டீரோ நற்செய்தி!
உழைக்க வேண்டாம் இனி
ஊரைச்சுற்றியே நாமும்
ஊதாரியாய் தினமும்
வாங்கிய பணத்தையெல்லாம்
வட்டியோடு சேர்த்து
விழலுக்கிறைக்கலாம் வாரீர்!
கடனடைக்க வேண்டிய
கவலையினி மறப்போம்!
கொடுத்தவனே கழித்துக்கொள்வான்!
மதிநிறை மந்திரியின்
நிதிநிலை அறிக்கை ஆணை!
கஜானாவே காலியாயினும்
கையில் ஓட்டிருக்க
கடன் பட்ட நெஞ்சே கலங்காதே!
—–
விசும்பும் பொய்த்துப் போய்
விம்மி அழுத நீரும் பத்தாது
வரும் காவிரியில் நீரென்றே
வைகைத்து காத்திருந்தாய்!
வராது நிலம் வரண்டால்
விவசாயி நீயென் செய்வாய்!
வாங்கிய கடனை நீயும்
விதையாய் உரமாய் இட்டும்
விளைச்சல் பொய்த்துப்போக
உணவின்றி உறைந்து
உணர்விழந்து நீ பதைத்த நேரம்!
தேனாய் விழுந்த செய்தி!
உன் கடன் தள்ளுபடி!
ஆகா அற்புதம்!
தேற்றிக் கொள் உன்னை!
தெம்பேற்றிக் கொண்டு நீயும்
உறுதிகொண்ட நெஞ்சுடனே
உறங்கச் சென்றிடுவாய் இனி!
நாளை தேர்தல் வருந்நேரம்
மந்தையாய் நீயும் போய்!
மக்களாட்சி மலரச்செய்து
மகுடம் மீட்டுத் தந்த
மகிழ்ச்சியுடன் வீடடைந்து
உணவெங்கே எனக்கேட்டால்!
கடன்கழித்த காரியத்திற்காக
காத்திருக்கமாட்டாயோ ஐவருடம்!
கடைசியாக கடன்
மீண்டும் கழிக்கப்படும்!
குளிரறையில் இருந்துகொண்டு
குறையதிகம் இல்லாதெழுதும்
குறிப்புகளுக்காக மன்னிக்கப்படுவேனாக!
இப்போதைக்கு எம்மால் முடிந்தது
இவ்வளவுதான்!
இதில் குறையொன்றுமில்லை…
இரண்டு வருடம் அங்கே இங்கே பார்த்து இறுதியாக இராமானுஜமா – இராமானுசமா போன்ற சிக்கல்களுக்கு எமக்கு ஏற்புடைய நிலையாவது வருமாறு.
ஒலிகள் பொதுவானவை! அவை மொழிகளுக்கு அப்பாற்பட்டவை என்பது எமது எண்ணம். தொல் தமிழகத்தில் பழக்கதிலிருந்த ஒலியமைப்புகளில் ஶ ஷ ஸ ஹ ஜ போன்றவை இல்லாது இருந்தன எனச் சொல்வதை ஏற்கலாம்! பொதுவாக சிறு உச்சரிப்பு வேறுபாடுகளால் பொருள் மாறும் தன்மையுடையன நமது மொழிகள்!
காலஞ்செல்ல செல்ல இத்தகைய ஒலிகளைக் கேட்க நேரிட்டது! பின்னர் புழங்க
நேரிட்டது எனக் கொள்ளலாம்! இதனை கூடுமானவரை தவிர்ப்பது நல்லதுதான்!
உதாரணத்திற்கு, விடயம், நிமிடம், வருடம் இப்படித்தான் தமிழ் பயிற்றுவித்த
ஆசிரியர்கள் எமக்கும் பயிற்றுவித்தனர். தவிர்த்துதான் தீர வேண்டும் எனக்
கட்டாயமொன்றுமில்லை என்றே கருதுகிறேன்!
இது வடமொழி சொற்கலப்பு என்பதனையும் தாண்டி இன்று அறிவியற் பெயர்கள்
உள்ளிட்ட பல இடங்களுக்கு விரிகின்றன! உதாரணத்திற்கு ஹைபிஸ்கஸ் என்பதை ஐபிசுகசு என்றெழுதுவதனைக் காட்டிலும் ஹைபிஸ்கஸ் என எழுதுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது! இது ஒரு உதாரணந்தான்!
பொருளும் எளிதில் போய்ச் சேர வேண்டுமென்பதையும் நாம் கருத்தில்
நிறுத்துதற் வேண்டும்! பணி, பனி போன்றவற்றுள் நாவின் சிறு சுழற்சியால்
ஏற்படும் பொருள் மாற்றங்களைப் போன்றதே இதுவும்! நகைச்சுவைக்கு சொல்ல
வேண்டுமாயின் சட்டி – ஜட்டி ஒரு உதாரணம்! இராஜஇராஜனையும் தாண்டி, இன்று ஸ்டாலின், ஜனனி, ஜான், முஸ்தபா இப்படி தற்காலத்தில் வழங்கப்படும்
பெயர்களும் இவற்றை அவசியமாக்குகின்றன! எமது பெயருந்தான்!
இப்பெயரையெல்லாம் சூட்ட மொழிக்கும் அப்பாற்பட்டு நல்ல காரணங்கள்
இருக்கத்தான் செய்கின்றன. மொழியைத் தாண்டி நல்ல காரணங்களே இருக்கக்கூடாதென்று நினைத்தாலேயன்றி இப்பெயர்களை ஏற்பதில் மனம் நோக வாய்ப்பில்லை.
மேலும் கிரந்த எழுத்து வடிவங்கள் தென்னக சாயலை ஒத்துயிருக்கின்றன!
இவற்றை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வதில் எந்த நெருடலும்
இல்லை! இவற்றை பயன்படுத்துவதால் தமிழைக் கொலை செய்கிறோம் என்ற
குற்றவுணர்ச்சியெதுவும் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை! மொழிச்சிதைவிற்கு வித்திடா வண்ணம் இவை ஒரு அளவிற்குள் இருக்க வேண்டுமென்று சொல்வதுதான் ஏற்கத்தக்கதாக தோன்றுகிறது!
இப்படித்தான் இருக்கணும், இவ்வெழுத்துக்களைச் சேர்ப்பது தமிழுக்கே
விரோதம் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் மிகைப்படுத்தலே! காலத்தின் தேவை! பிற மொழிச் சொற்களை பலுக்கி ஏற்பதையும் தாண்டி, புது எழுத்துக்களை கூட ஒலித் தேவைகளுக்காக ஏற்றுக் கொள்கிறதென்றால், அதனை “எமது மொழி காலத்திற்கேற்றவாறு பரிணாமம் பெருமொன்று” என்கிற கோணத்தில் பெருமைத் தரக் கூடிய ஒன்றாகவே கருதுகிறோம்!