Archive for May, 2009
மனச் சஞ்சலம் :-(
இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது எமது அண்ணனை கால் சிகிச்சைக்காக சித்தூருக்கு அம்மா அழைத்துச் சென்றிருந்தார். நான் வடலூரில் மாமா வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தேன். எட்டு வயது? விடுதலை வரலாறு – காந்தி – நேரு பற்றியெல்லாம் கதைக் கேட்டு காங்கிரஸ் மீது பள்ளிப் பிராயத்திலே பலத்த அபிமானம் இருந்ததுண்டு… இராஜீவ் கொல்லப்பட்டதாகவும் சித்தூரில் நிலைமை சரியில்லை எனவும் எமக்கு தெரிவிக்கப்பட்ட தருணம் இன்றும் நினைவில் இருக்கிறது.
துன்பமான நினைவு.. நாளை மறுநாளோடு பதினெட்டு வருடங்கள்..
இலங்கை இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் மடிந்த வேலுப்பிள்ளை பிராபாகரனின் மரணச் செய்தி மனச் சஞ்சலப்படுத்தும் நிகழ்வாகும்.
பல்வேறு காரணங்களுக்காக வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கு மரணந்தான் தீர்ப்பாககக் கூடும் என்று நினைத்ததுண்டு. அதுவே இன்று ஏற்பட்டும் விட்டது. ஆனால் ஓசாமா பின்லேடன், அல்கொய்தா, தாலிபான் அமைப்புகளுடன் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் ஒப்பிடுவது கண்டிக்கத் தக்க செயல்.
வேலுப்பிள்ளை பிரகாகரனின் மரணம் – மனச் சஞ்சலம். அவரது தோற்றத்திற்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு கிடைத்திடவில்லை. ஆனால் அவர் பெற்றது – தக்கது.
தற்சார்புடைமை இயக்கம்..
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக யாமிட்டிருந்த ஒரே பதிவு தற்சார்புடைமை பற்றியது. இது என்னவென்று என்னாலேயே இப்போதைக்கு விரிவாக விவரிக்க முடியாது. இதனை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலுத்து தோன்றத் தொடங்கியுள்ளது.
இதன்பொருட்டு நிறைய வாசிக்க வேண்டியுள்ளது. இப்போதைக்கு இதைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவ்வப்போது நான் சில நண்பர்களிடம் சொல்லி வரும் கருத்தையே முன்வைக்க முடியும்.
டில்லியில் இருக்கும் அதிகார மையத்திற்கு வரி செலுத்துவதென்பது சம்பாதிக்கத் தொடங்கி வருமான வரி கட்டத் தொடங்கியதிலிருந்து ஒரு வித உறுத்தலாகவே இருந்து வருகிறது. அதற்காக அங்கிருக்கும் மக்களும் எம்மக்கள் தான். அதே போல் தென் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு சென்னையில் இருக்கும் அதிகார மையத்திற்கு கட்டுப்படவும் விரும்பவில்லை.
மாறாக எனது அடிப்படைத் தேவைகளுக்கு வழியமைத்துக் கொடுக்கும் மிகச் சிறிய நிர்வாக அமைப்பிற்கு எமது பங்களிப்புகள் இருக்க வேண்டும். பொதுவான நன்மைகளுக்காக அவ்வமைப்பு சென்னைக்கும், தேசம் முழுமைக்குமான பொதுவான நலனுக்கா சென்னை தில்லிக்கும் பங்களிக்க வேண்டுமே ஒழிய, தனி மனித/ அமைப்புகளிடமிருந்து பிடுங்கப்பட்டு பின்னர் ஆள்வோரது கரிசனத்தில் காலதாமதமாட்டு திரும்பக் கிட்டச் செய்யும் முறை மாற வேண்டும்..
இச்சிந்தனையை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும். ம்ம்ம்… இப்போதைக்கு மனதில் ஊன்றத் தொடங்கியுள்ள சிந்தனை இது..
பி.கு: மாநில சுயாட்சி போன்ற கருத்துக்களின் ஆழம் அறியேன். அவற்றுடன் இவ்வெண்ணம் எவ்வளவு ஒத்துப்போகும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.